திருச்செங்கோடு, செப்.21: சிறுமொளசியில் விவசாயிகளுக்கு மாவு தாயாரிப்பு, சிறு தொழில் தொடங்குவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. திருச்செங்கோடு அருகேயுள்ள சிறுமொளசி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மாவு தயாரிப்பில் சிறு தொழில் தொடங்குவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் வட்டப்பரப்பு, வேட்டுவம்பாளையம், சிறுமொளசி, அத்திபாளையம், சித்தாளந்தூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், சுயஉதவி குழுவினர், அம்மா பண்ணை மகளிர் குழுவை சார்ந்த பெண்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் எளச்சிபாளையத்தை சேர்ந்த தனியார் மாவு மில் நிறுவன உரிமையாளர் சக்திவேல் பங்கேற்று மாவு தயாரிப்பு குறித்த சிறுதொழில் தொடங்குவது பற்றியும், அதற்கான முதலீடு, வழிமுறைகள், இடவசதி, வங்கி கடன்உதவி பெறுவது பற்றியும், நிறுவனம் மூலம் எந்த மாதிரி சிறுதொழில் செய்யலாம். இயந்திரங்கள் வாங்குவதற்கான வழிமுறைகளை பற்றியும் எடுத்துரைத்தார்.இந்நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலர் ரமேஷ் பிரபாகர் வேளாண் துறை மானிய திட்டங்கள் பற்றியும், அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஹேமலதா, திட்ட செயல்முறைகள் மற்றும் உழவன் செயலி பதிவிறக்க பயன்களையும் விளக்கினர்.