திருடிய மொபட்டை தீவைத்து கிணற்றில் வீச்சு

நெல்லை, செப். 19:  சங்கரன்கோவில் ஊத்துமலை அருகேயுள்ள அண்ணாமலைபுதூரை சேர்ந்த வக்கீல் அலெக்சாண்டர். இவர் கடந்த மாதம் மனைவிக்கு மொபட் ஒன்று வாங்கி கொடுத்தார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி இரவு அலெக்சாண்டர் வழக்கம் போல் வீட்டின் முன்பு மொபட்டை நிறுத்தி விட்டு தூங்க சென்று விட்டார். பின்பு காலையில் தூங்கி எழுந்து அவர் பார்த்த போது அதிர்ச்சியடைந்தார். வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மொபட் மாயமாகி இருந்தது.  இதுகுறித்து அலெக்சாண்டர் ஊத்துமலை போலீசில் புகார் செய்தார்.

இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே நேற்று ஊர் எல்லையிலுள்ள வனத்துறை பகுதியில் தண்ணீர் இல்லாத பாழும் கிணற்றுக்குள் மொபட் தீக்கிரையாக்கப்பட்டு கிடந்தது. இதனை அவ்வழியாக சென்றவர்கள் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த போலீசார் கருகிய நிலையிலுள்ள மொபட்டை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிந்து மொபட்டை திருடிச்சென்று தீக்கிரையாக்கிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: