மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது-₹4.50 லட்சம் மதிப்பிலான 11 வாகனங்கள் பறிமுதல்

திருப்பதி : திருப்பதி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து, 11 வாகனங்களை பறிமுதல் செய்தனர். திருப்பதி மாவட்டம் நாகலாபுரம் மண்டலம் பகுதியில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருட்டு நடைபெறுவது குறித்து பல்வேறு புகார்கள் காவல்துறைக்கு வந்தது. அதன்பேரில் திருப்பதி மாவட்ட காவல்துறை எஸ்பி பரமேஸ்வர் உத்தரவின் பேரில் டிஎஸ்பி ராமராஜு, நாகலாபுரம் ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் நாகலாபுரம் சந்திப்புகளில் பல குழுக்களாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் நாகலாபுரம் கிழக்கு ஆர்ச் பகுதியில் நேற்று முன்தினம் மாலை வாகன சோதனையின்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்தனர். அவர்களை விரட்டி பிடித்த போலீசார் விசாரணை நடத்தியதில் நாகலாபுரம் மண்டலத்தை சேர்ந்த அஜய்(28), விஷ்ணு(19), வினோத் குமார்(20) பிரதாப்(32) ஆகிய நான்கு பேரும் பல்வேறு இடங்களில் 2 சக்கர வாகன திருட்டு வழக்கில் ஈடுபட்டது தெரியவந்தது.மேலும் அவர்களிடமிருந்து ₹4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 11 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குபதிந்து, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: