அகமதாபாத்: இங்கிலாந்து அணியுடன் நாளை தொடங்க உள்ள 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலும், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளமாகவே இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக இந்திய அணி துணை கேப்டன் அஜிங்க்யா ரகானே கூறியுள்ளார். சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று முன்னிலை பெற்றதும், இந்த தொடரில் இந்தியா எதிர்ப்பின்றி சரணடைந்துவிடும் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், அடுத்த 2 டெஸ்டிலும் அபாரமாக விளையாடிய இந்தியா 317 ரன் வித்தியாசத்திலும், 10 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றிகளை வசப்படுத்தி மரண அடி கொடுத்தது. அதே சமயம் 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளங்கள் குறித்த சர்ச்சையும் வெடித்தது. அதிலும், மோடி ஸ்டேடியத்தில் நடந்த 3வது போட்டி 2வது நாளிலேயே முடிவுக்கு வந்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.