மும்பை: ஆஸ்திரேலிய அணியுடன் டி20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடரில் மோதவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல், ரிஷப் பன்ட் இடம் பிடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்ப்யணம் மேற்கொண்ட இந்திய அணி டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த நிலையில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிகளைக் குவித்து அசத்தியது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டி விசாகப்பட்டணத்தில் பிப். 24ம் தேதியும், 2வது டி20 பிப். 27ம் தேதி பெங்களூருவிலும் நடைபெற உள்ளன.இதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெறும். இந்த 2 தொடர்களுக்கான இந்திய அணி தேர்வு மும்பையில் நேற்று நடைபெற்றது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான குழுவினர் வீரர்களைத் தேர்வு செய்தனர். உலக கோப்பை போட்டித் தொடருக்கு முன்பாக இந்தியா விளையாடும் கடைசி சர்வதேச போட்டிகள் இவை என்பதால், வீரர்கள் தேர்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், நியூசிலாந்து அணியுடனான கடைசி 2 ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டிருந்த கேப்டன் விராத் கோஹ்லி மீண்டும் தலைமை பொறுப்பேற்கிறார். தொடர்ச்சியாக விளையாடி வரும் ரோகித் ஷர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் ஆஸி. தொடரில் துணை கேப்டனாக நீடிக்கிறார். ரிஷப் பன்ட் மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் டி20, ஒருநாள் தொடர்களுக்கான அணியில் இடம் பிடித்துள்ளனர். டி20 அணியில் இடம் பெற்றுள்ள தினேஷ் கார்த்திக், ஒருநாள் போட்டிகளுக்கு சேர்க்கப்படவில்லை. இதனால் உலக கோப்பைக்கான அணியில் அவர் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது. வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பூம்ரா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.