வாஷிங்டன்: மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கு தங்கி பணிபுரிய எச்1பி விசா வழங்கும் அமெரிக்க குடியேற்ற அமைப்பை எதிர்த்து இந்திய ஐடி நிறுவனங்கள் கூட்டமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. அமெரிக்காவில் 1000க்கும் அதிகமான ஐடி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் பலவற்றை இந்திய வம்சாவளியினர் நடத்தி வருகின்றனர். இவற்றில் பணியாற்ற தொழில்நுட்ப பணியாளர்கள் இந்தியா, சீனா போன்ற வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுகின்றனர். எச்1பி விசா மூலம் அழைத்து வரப்படும் இவர்கள் 3 முதல் 6 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் பணியாற்றலாம்.
இந்த நிலையில், சமீபத்தில் அமெரிக்க குடிமக்கள் மற்றும் குடியேற்ற ேசவை அமைப்பு எச்1பி விசா கால அளவை 3 ஆண்டுக்கும் குறைவானதாக மாற்ற அனுமதி அளித்துள்ளது. இதனால் ஏராளமான ஐடி நிறுவனங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இதனால் எச்1பி விசா கால அளவை குறைப்பதை எதிர்த்து டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாசை சேர்ந்த ஐடி சேவை கூட்டமைப்பு கடந்த வாரம் அமெரிக்க குடிமக்கள் மற்றும் குடியேற்ற சேவை அமைப்பை எதிர்த்து ஒரு வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், ‘‘எச்1பி விசா கால அளவை சில மாதங்கள் மற்றும் நாட்கள் என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது. சில சமயம் விசா பெற்றவர்கள் நிறுவனத்தில் சேரும்போது அந்த விசா காலவதியாகி விடுகிறது. எனவே 3 ஆண்டுக்கும் குறைந்த கால அளவு விசா வழங்கக் கூடாது. இந்த விசா வழங்கும் அதிகாரத்தை தொழிலாளர் துறை மற்றும் ஒழுங்குபடுத்தும் அமைப்புக்கு மாற்ற வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்க குடிமக்கள் மற்றும் குடியேற்ற சேவை அமைப்பை எதிர்த்து தொடரப்பட்டுள்ள 2வது வழக்கு இதுவாகும். ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் அமெரிக்க ஐடி நிறுவனங்கள் இதேபோன்று ஒரு வழக்கை தொடர்ந்திருந்தன.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி