கொள்ளிடம் அருகே மாதானம் புறக்காவல் நிலையத்தில் முழுநேர காவலர்கள் நியமிக்க வேண்டும்

கொள்ளிடம், ஏப்.23: கொள்ளிடம் அருகே மாதானம் புறக்காவல் நிலையத்தில் 24 மணி நேரமும் காவலர்களை பணியமர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதானம் கடைவீதியில் புதியதாக புறக்காவல் நிலையம் கட்டப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டது. சில தினங்கள் மட்டுமே இங்கு காவலர் பணியில் அமர்த்தப்பட்டிருந்தார். பின்னர் கடந்த மூன்று மாதங்களாக புறக்காவல் நிலையத்தில் காவலர் இல்லாமல் பூட்டியே கிடக்கிறது. புதுப்பட்டினம் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள இந்த புறக்காவல் நிலையம் மாதானம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அவ்வப்போது நிலவி வரும் சட்டம் ஒழுங்கு பிரச்னை சம்பந்தமான தகவல்களை காவல் நிலையத்துக்கு தெரிவிக்கும் வகையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையிலும் மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வகையிலும் முன்கூட்டியே தடுக்கும் விதத்திலும் புறக்காவல் நிலையம் புதியதாக அமைக்கப்பட்டது.

மேலும் அப்பகுதியில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அதன் உண்மை தன்மையை அறிந்து நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கும் வகையிலும் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது.
ஆனால் போதிய எண்ணிக்கையில் காவலர்கள் இல்லாததால் மாதாளம் புறக்காவல் மையத்தில் தொடர்ந்து காவலர்களை நியமிக்க முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. இதனால் புறக்காவல் நிலையம் 3 மாதங்களாக பயனின்றி இருந்து வருகிறது. எனவே அப்பகுதி சூழ்நிலை மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு தொடர்ந்து 24 மணி நேரமும் புறக்காவல் நிலையத்தில் ஒரு காவலர் வீதம் பணி அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post கொள்ளிடம் அருகே மாதானம் புறக்காவல் நிலையத்தில் முழுநேர காவலர்கள் நியமிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: