பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உடல் பரிசோதனை

கிருஷ்ணகிரி, ஜன.21:  கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்காக வந்த பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களை, நீண்ட நேரம் தரையில் அமர வைத்து அலைக்கழித்ததால் கடும் அவதிக்குள்ளாகினர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 11, 12ம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான உடல் பரிசோதனை, நேற்று கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் நடந்தது. இந்த பரிசோதனைக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 40க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள், தங்கள் விண்ணப்பங்களை ஆசிரியர்கள் உதவியுடன் பரிசோதனைக்கு கொண்டு வந்தனர். அவர்களை மருத்துவகுழுவினர் பரிசோதனை செய்து, விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு அனுப்புவது வழக்கம்.

ஆனால், நேற்று காலை 9 மணிக்கு வந்த மாணவர்களை, மருத்துவமனை ஊழியர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. மேலும், மாணவர்கள் அமர்வதற்கு கூட இடமில்லாமல் தரையில் அமர்ந்தும், முடியாமல் நின்று கொண்டும் இருந்தனர். சுமார் மூன்று மணி நேரம் கழித்து வந்த ஊழியர்கள், அவர்களது விண்ணப்பங்களை பெற்ற பின்னரே மருத்துவக்குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். மேலும், உடல் பரிசோதனை அறிக்கையை உடனே தர முடியாது. மாலை வரை காத்திருக்குமாறு கூறிச்சென்றதால், மாணவர்கள் மருத்துவமனை வளாகத்தின் நடைபாதை பகுதியிலேயே காத்து கிடந்தனர். கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், மாணவர்களுக்கு தனித்தனியாக உடல் பரிசோதனை மேற்கொள்ளாமல், மருத்துவமனை வளாகத்திலேயே நீண்ட நேரம் அமர வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்படுத்தியது.

Related Stories: