வீட்டில் தூங்கிய பிரெஞ்சு குடியுரிமை மூதாட்டியை தாக்கி பலாத்காரம்?

புதுச்சேரி, செப். 21: புதுச்சேரி தூய்மாஸ் வீதியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற 79 வயது மூதாட்டி வசித்து வந்தார். பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். தூய்மாஸ் வீதியில் இவருக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தில் புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்த பிரெஞ்சு குடியுரிமை பெற்ற 55 வயது நபர், கடந்த 2013 முதல் 2017 வரை குத்தகை அடிப்படையில் ஓட்டல் நடத்தி வந்ததாக தெரிகிறது. குத்தகை காலம் முடிந்தும், அந்த நபர், அந்த இடத்தை காலி செய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இப்பிரச்னை தொடர்பாக, இடத்தின் உரிமையாளரான பிரெஞ்சு குடியுரிமை மூதாட்டிக்கும், ஓட்டல் குத்தகைக்தாரருக்கும் இடையே நீதிமன்றத்தில் கடந்த 2017 முதல் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் மூதாட்டி, தூய்மாஸ் வீதியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தார். நேற்று அதிகாலை அவர், புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு திடீரென சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது அங்குள்ள மருத்துவர்கள் மூதாட்டியிடம் உடல்நலம் பற்றி விசாரித்தபோது, தன்னை ஒரு கும்பல் தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியதால் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி மருத்துவமனையின் புறக்காவல் நிலைய போலீசார், இதுபற்றி ஒதியன்சாலை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கிழக்கு எஸ்பி லட்சுமி சவுஜன்யா, ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மூதாட்டியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், சம்பவம் நடந்த வீட்டுக்கு சென்றும், அங்கு மற்றொரு பகுதியில் தங்கியுள்ள ஓட்டல் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டும் விசாரணை நடத்தினர். மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்டாரா அல்லது இடப்பிரச்னையில் நாடகம் ஆடுகிறாரா? என்பது மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். மருத்துவர்களிடம், போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, மூதாட்டியின் உடலில் காயங்கள் இருப்பதை மட்டுமே உறுதிபடுத்தியதாக தெரிகிறது. மற்றபடி பலாத்காரம் தொடர்பான ஆதாரங்கள் எதையும் தெரிவிக்காத நிலையில், தொடர்ந்து தீவிர விசாரணை நடக்கிறது. இச்சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post வீட்டில் தூங்கிய பிரெஞ்சு குடியுரிமை மூதாட்டியை தாக்கி பலாத்காரம்? appeared first on Dinakaran.

Related Stories: