சீனா பூண்டு விற்பனையை ஒன்றிய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்

திண்டிவனம், செப்.13: உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் சீனா பூண்டு விற்பனையை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் நேற்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறுகையில், காவிரி பாசன விவசாயிகள் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் கிடைக்கவில்லை. கூட்டுறவு வங்கி கணக்கை வருமான வரித்துறை முடக்கி வைத்திருப்பதே இதற்கு காரணமாகும். தமிழகத்தில் தொழில் முதலீடுகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழகத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் 20 சதவீதம் உள்ஒதுக்கீடு செய்ய ஆய்வு செய்து அறிக்கை வெளியிட பிற்படுத்தப்பட்ட ஆணையத்துக்கு அரசு ஆணையிட்டு 20 மாதங்கள் முடிந்தும் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நெல் கொள்முதல் நிலைய ஊழல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்திற்கு கல்விநிதியை மத்திய அரசு ஒதுக்க மறுத்தால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும். தமிழகத்திற்கு ரூ.573 கோடி ஒதுக்க மத்திய அரசு மறுத்துள்ளதால் மோதல் முற்றுகிறது. இதனை சரி செய்ய அமைச்சர் குழுவை டெல்லிக்கு அனுப்பி கல்வி நிதியை வழங்க வலிறுத்த வேண்டும். சீனா பூண்டுகள் உடல்நலத்திற்கு கேடு என்பதால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. சீனாவில் பூண்டுகள் பூச்சி மருந்து தெளிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் ஆபத்தை விளைவிக்கும் பூஞ்சைகள் உள்ளது. இந்த வகை பூண்டு விற்பனையை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும், என்றார்.

The post சீனா பூண்டு விற்பனையை ஒன்றிய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: