கொழும்பு: விடுதலைப் புலிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் கடும் நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து, இலங்கை தமிழ் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பதவியை ராஜினாமா செய்தார். இலங்கையில் ஆளும் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சரவையில் இடம் பெற்ற ஒரே தமிழ் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன். வடக்கு பிராந்தியத்தை சேர்ந்த இவர், குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்தார். கடந்த 2 ம் தேதி யாழ்ப்பாணத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் விஜயகலா, ‘2009 மே 18ம் தேதிக்கு முன், நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதை இப்போது எண்ணிப் பார்க்க வேண்டும். தற்போதைய சூழலில் நாம் சுதந்திரமாக நடமாட வேண்டுமென்றால், பள்ளி சென்ற நம் குழந்தைகள் பத்திரமாக வீடு வந்து சேர வேண்டுமென்றால் மீண்டும் விடுதலைப் புலிகளை மறுமலர்ச்சி பெற்று திரும்ப கொண்டு வர வேண்டும் என்பதே நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும்’’ என்றார்.