முக்கிய குற்றவாளியை காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு

சேலம், நவ.28: சேலத்தில் போலீஸ் எனக்கூறி ₹50 லட்சம் பறித்த வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், முக்கிய குற்றவாளியை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (39). தொழில் அதிபரான இவரிடம், ₹50 லட்சம் கொடுத்தால் கூடுதலாக 15 லட்ச ரூபாய் (30 சதவீதம்) தருவதாக சேலத்தை சேர்ந்த கும்பல் தெரிவித்தது. இதை உண்மை நம்பி கடந்த செப்டம்பர் 26ம் தேதி ₹50 லட்சத்துடன் வெங்கடேஷ் சேலம் இரும்பாலை பகுதிக்கு காரில் வந்தார்.அப்போது, அவரது காரை போலீஸ் உடையில் வந்த கும்பல் வழிமறித்து ₹50 லட்சத்தை பறித்து சென்றது. பணத்தை இழந்த வெங்கடேஷ் இதுகுறித்து இரும்பாலை போலீசில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், பணம் பறிப்பில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்தனர்.

இதனிடையே, இந்த பணம் பறிப்பு வழக்கில் மூளையாக செயல்பட்ட வேலூரை சேர்ந்த நடராஜன் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க தனிப்படையின்ர விசாரித்து வந்தனர். கடந்த 20ம் தேதி நடராஜன், அவரது மனைவி சுஜாதா, அவரது கூட்டாளிகள் சீனிவாசன், கோபி, மகாலிங்கம், ஜெயமோகன் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், போலீஸ் போல் நடித்த வேலூரைச் சேர்ந்த ராகேஷ், நரேஷ்குமார், சுரேஷ்குமார், வேலு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ₹30 லட்சம், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீஸ்என கூறி ₹50 லட்சம் பறித்த வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் மூளையாக செயல்பட்ட நடராஜன் மற்றும் அவரது கூட்டாளிகளை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, இந்த வழக்கில் 4 பேரை பிடித்து விசாரித்த போலீசார், அவர்களை விடுவித்து விட்டதாக, புகார் எழுந்துள்ளது. இது அதிகாரிகள் கவனத்திற்கு சென்றதால், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி, போலீசாருக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

The post முக்கிய குற்றவாளியை காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு appeared first on Dinakaran.

Related Stories: