செந்தூர விநாயகர்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தனிச்சந்நதியில் சுமார் 6 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கும் விநாயகருக்கு திருமேனி முழுவதும் செந்தூரம் பூசப்பட்டிருக்கும். இதற்கான காரணம் என்னவென்றால் சம்பந்தாசூரனை வதம் செய்யும்போது அவனது உதிரம் பூமியில் கொட்டியது. அதிலிருந்து பல அசுரர்கள் உருவாகி கொண்டிருந்தனர். இதை உணர்ந்த விநாயகப்பெருமான் சம்பந்தா சூரனின் உதிரத்துளிகள் பூமியில் மேலும் விழாதபடி அதை தனது கரங்களில் ஏந்தி மேனியில் பூசிக்கொண்டார். அதை நினைவு படுத்தும் வகையில் இத்தல விநாயகருக்கு

திருமேனியில் செந்தூரம் பூசப்படுகிறது.

கடல் நுரையினால் உருவாக்கப்பட்ட விநாயகர்

திருப்பாற்கடல் கடையும் போது விநாயகரை வழிபடாமல் தொடங்கியதால் காரியம் தடைப்பட்டது. இந்திரன் கடல் நுரையை எடுத்து விநாயகர் உருவத்தை செய்து பூஜித்தார். இவ்விநாயகருக்கு ஸ்வேதா விநாயகர், நுரை விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இவ்விநாயகரை வழிப்பட்டால் தடைப்பட்ட காரியங்கள் நடந்தேறும். இவ்விநாயகர் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருவலஞ்சுழியில் அமைந்துள்ள சடைமுடி நாதர் சுவாமி கோயிலில் தனிச்சந்நதி கொண்டுள்ளார்.

வி.ஐ.பி விநாயகர்

சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னரில் உள்ளது நவசக்தி விநாயகர் ஆலயம். இந்த கோயில் 1936 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது .

முதலில் அரசமரத்தடியில் சிறிய அளவிலான சிலை வைத்து வழிபட்டு வந்த நவ சக்தி விநாயகர் நாளடைவில்  பிரசித்தி பெற்று திகழ்ந்தது .முதன் முறையாக 1967 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் பக்தவத்சலம், சொல்லின் செல்வர் ம.பொ.சி,  ஆன்மிக சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார் ஆகியோர்  தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. 73 வருடங்களாக பக்தர்களுக்கு வேண்டுதலை நிறைவேற்றும் கண் கண்ட  தெய்வமாக நவசக்தி விநாயகர் விளங்குகிறார். இந்த கோயிலுக்கு அதிகமாக விஐபி பக்தர்கள் உள்ளதால் எப்போதும் கூட்டத்திற்கு குறைவில்லை.  இதனால் விஐபி விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார்.

- ஜி.சிவக்குமார்

Related Stories: