பழநி கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா இன்று துவங்குகிறது: நவ.26ல் மகா தீபம்

 

பழநி, நவ. 20: பழநி கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா நாளை காப்புகட்டுதலுடன் துவங்க உள்ளது. முக்கிய நிகழ்ச்சியாக நவ.26ம் தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது. பழநி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று திருக்கார்த்திகைத் திருவிழா. 7 நாட்கள் நடைபெறும் இவ்விழா இன்று (நவ.20) மலைக்கோயிலில் காப்புகட்டுதலுடன் துவங்க உள்ளது. மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜைக்குப்பின் காப்பு கட்டப்படும். தொடர்ந்து மாலை 6 மணிக்கு சண்முகார்ச்சனை, 6.30 மணிக்கு சண்முகர் தீபாராதனை, இரவு 7 மணிக்கு தீபாராதனை மற்றும் தங்கரத புறப்பாடு நடைபெறும்.

இதனைத்தொடர்ந்து வரும் 6 நாட்களும் இப்பூஜை நடைபெறும். 25ம் தேதி முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம் ஏற்றுதல் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையின்போது நடைபெறும். வரும் 26ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெறும். அதிகாலை 4.30 மணிக்கு விளா பூஜை நடைபெறும். இதனைத்தொடர்ந்து சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.

தொடர்ந்து யாகசாலை தீபாராதனை, மலைக்கோயிலில் 4 மூலைகளில் தீபம் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். மாலை 6.15 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை கொளுத்துதல் நடைபெறும். தொடர்ந்து திருஆவினன்குடி கோயில் மற்றும் பெரியநாயகி அம்மன் கோயில்களிலும் கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும். ஏற்பாடுகளை பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் கோயில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

The post பழநி கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா இன்று துவங்குகிறது: நவ.26ல் மகா தீபம் appeared first on Dinakaran.

Related Stories: