தீப்பந்தம், சிம்னி விளக்கு வெளிச்சத்தில்தான் வாழ்க்கை ஏலகிரியில் 3 தலைமுறையாக மின்சாரம் காணாத மலை கிராமம்

*அதிகாரிகள் நடவடிக்கைக்கு மலைவாழ் மக்கள் கோரிக்கைஜோலார்பேட்டை : ஏலகிரி மலையில் 3 தலைமுறையாக மின்சாரம் காணாத மலைவாழ் மக்கள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழகத்தின் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரி மலையில், 14 சிறிய கிராமங்களை உள்ளடக்கிய தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இங்கு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நிலாவூர் சாலையிலிருந்து பிரிந்து உள்ளே சென்றால் ராயனேரி கிராமம் உள்ளது. அங்கிருந்து 2 கிலோ மீட்டர் உள்ளே சென்றால், கெட்டுக்காடு வட்டம் உள்ளது. இங்கு 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மலைவாழ் மக்கள் கடந்த 3 தலைமுறைகளாக மின்சாரத்தை காணாமல் தீப்பந்தம் வெளிச்சத்திலும், சிம்னி விளக்கிலும் தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.குடிசைகளில் வாழ்ந்து வந்தவர்கள், தற்போது சிமெண்ட் மற்றும் இரும்பு தகர ஷீட்டினால் கூரைகளை அமைத்துள்ளனர். ஆனால், ட்ரில்லிங் போடுவதற்கு மின் வசதி இல்லாததால் மரத்தாலான கொம்புகளில் ஆணி அடித்து இரும்பு தகர ஷீட் கூரைகளை அமைத்துள்ளனர். அந்த பகுதியில் யாராவது இறந்துவிட்டால், சடலங்களை ஏரிக்கு அருகே உள்ள சுடுகாட்டில் திறந்தவெளியில் எரித்துவிடுகின்றனர். இல்லாவிட்டால், புதைத்துவிடுகின்றனர். அவ்வாறு எரிக்கப்படும் சடலங்களின் சாம்பல், மழைக்காலங்களில் ஏரி நீரில் கலந்துவிடுகிறது. மேலும், புதைக்கப்பட்டவர்களின் உடல் கழிவுகள் மழை நீரில் ஊறி கிணற்றில் கலக்கிறது. இந்த கிணற்று நீரை தான் அப்பகுதியினர் பயன்படுத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.தினமும் மாலை சூரியன் அஸ்தமனமாகும் நேரத்துக்கு முன்பு அனைவரும் குடியிருப்புகளுக்கு சென்றுவிடுகின்றனர். இதையடுத்து சிம்னி விளக்குகள் தான் இவர்களுக்கு வெளிச்சம். இவர்களின் குடும்பத்தில் ஏதாவது சடங்கு, சம்பிரதாயம் என்றால் இரவு நேரத்தில் வெளிச்சத்திற்காக தீப்பந்தம் ஏற்றிக்கொள்கின்றனர். மேலும் யாராவது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டுமானால், டோலி கட்டிதான் தூக்கி செல்கின்றனர். எனவே இருளில் மூழ்கியுள்ள மலைவாழ் மக்களின் வாழ்க்கையை வெளிச்சத்துக்கு கொண்டுவர மின்சார வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் போர்க்கால அடிப்படையில் சோலார் மின்விளக்குகள் அமைக்கப்பட வேண்டும், சாலை மற்றும் குடிநீர் வசதி உருவாக்கித்தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post தீப்பந்தம், சிம்னி விளக்கு வெளிச்சத்தில்தான் வாழ்க்கை ஏலகிரியில் 3 தலைமுறையாக மின்சாரம் காணாத மலை கிராமம் appeared first on Dinakaran.

Related Stories: