சென்னை : பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பரங்கி மலை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை, எஸ்.டி.பி.ஐ, ஆம். ஆத்மி, தமிழக பேரியக்க கட்சி தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் சென்னை பிரதமர் மோடி வந்தார். இவரது சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனைய வருகை பகுதியில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்திய இயக்குநர்கள் பாரதிராஜா, கவுதமன் அமீர், வெற்றிமாறன், ராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சென்னை விமான நிலையம் அருகே போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து மணப்பாறையில் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய தமிழர் தேசிய முன்னணி மாவட்ட செயலாளர் உலகநாதனை போலீசார் கைது செய்தனர். பிரதமர் மோடியின் வருகையை கண்டித்து விமான நிலையம் எதிரே மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிமுன் அன்சாரி, தனியரசு, மணியரசன் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.