கோவை: கோவையில் கல்லூரி மாணவி உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட பயிற்சியாளர் ஆறுமுகம் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆறுமுகத்தின் உதவியாளர்கள் 5 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. போலி பயிற்சியாளர் ஆறுமுகம் தன்னை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தினுடைய பயிற்சியாளராக அங்கீகரிக்கப்பட்டவராக கூறிக்கொண்டு பல்வேறு போலி சான்றிதழ்களை தயாரித்து பல்வேறு கல்லூரிகளில் 1450 முகாம்களில் இந்த பேரிடர் பயிற்சியை கொடுத்திருக்கிறார். இந்த சூழலில் கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் பயிற்சி கொடுத்த போது லோகேஸ்வரி என்ற மாணவியை தள்ளிவிட்டதின் அடிப்படையில் அந்த மாணவி உயிரிழந்தார். இதுதொடர்பாக போலி பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். போலி பயிற்சியாளர் ஆறுமுகத்துக்கு ஜூலை 27ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஞானசம்பந்தம் உத்தரவிட்டுள்ளார். ஆறுமுகத்தை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை தரப்பில் மனு அளிக்கப்பட்டது.
