சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரால் வருகின்ற 18.12.2025 அன்று வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் அடிக்கல் நாட்டி, தொடங்கி வைக்கப்படவுள்ள பணிகளான ரூ.11.17 கோடி திட்ட மதிப்பீட்டில் கொளத்தூர், ஜி.கே.எம் காலனி, அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியையும் மற்றும் ரூ.6.30 கோடி திட்ட மதிப்பீட்டில் கொளத்தூர், பொரியார் நகர் அமுதம் அங்காடியையும் இன்று (12.12.2025) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரால் வருகின்ற 18.12.2025 அன்று திறக்கப்படவுள்ள கொளத்தூர், ஜி.கே.எம் காலனி, ஜம்புலிங்கம் பிரதான சாலையில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.25.72 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையின் இறுதிக் கட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், கடந்த 14.11.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ள கொளத்தூர், பொரியார் நகர் “முதல்வர் படைப்பகத்தையும்,” பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுவரும் பெரியார் அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள புறகாவல் நிலையத்தின் (Police Outpost) கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளின்போது மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர். கௌஷிக், மண்டலக் குழுத்தலைவர் சரிதா மகேஷ்குமார், சிஎம்டிஏ தலைமைப் பொறியாளர் மகாவிஷ்ணு, கண்காணிப்பு பொறியாளர்கள் பாலமுருகன், ராஜன்பாபு, மாமன்ற உறுப்பினர்கள் எ.நாகராஜன், ஸ்ரீதணி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஐ.சி.எப்.முரளிதரன், மகேஷ்குமார், மாநகராட்சி மண்டல அலுவலர் சொக்கலிங்கம், செயற்பொறியாளர் சதீஷ்குமார் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
