திரைப்படத்தை பற்றி அவதூறு கருத்து தயாரிப்பாளரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய யூடியூபர் சங்கர் கைது: அலறி அடித்து வெளியிட்ட வீடியோ வைரல்

 

சென்னை: தயாரிப்பாளரிடம் ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டிய வழக்கில் சங்கர் கைது செய்யப்பட்டார். யூடியூபர் சங்கர், சவுக்கு மீடியா என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அவருடன் நெறியாளரான மாலதியும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். வழக்கமாக குறிப்பிட்ட சிலரை மட்டும் குறி வைத்து தாக்குவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். அதாவது, தனக்கு வேண்டப்படாத ஆட்களை தனது யூடியூப் பக்கத்தில் தவறாக பேசியும், அவதூறு பரப்புவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். குறிப்பாக அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி, போலீஸ் ஐபிஎஸ் அதிகாரியை விமர்சித்தும், பெண் காவலர்களை தவறாக பேசியும் வீடியோ வெளியிட்டார். இதன் காரணமாக கடந்த ஆண்டு யூடியூபர் சங்கரை தேனியில் போலீசார் கைது செய்தனர். அப்போது சவுக்கு சங்கரின் அறையில் கஞ்சா வைத்திருந்ததாக போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனியாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கிலும் சங்கர் கைது செய்யப்பட்டார்.

இதுமட்டுமில்லாமல் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் சங்கர் மீது பதியப்பட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டதால் பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் சிறையில் இருந்து வெளியே வரமுடியாத நிலை நீடித்தது. இதனையடுத்து நீதிமன்றம் குண்டர் சட்டத்தை ரத்து செய்ததையடுத்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த சங்கர் மீண்டும் அமைச்சர்கள், அரசு அதிகாரிகளை ஒருமையில் விமர்சித்தும், இல்லாத ஒரு விஷயத்தை இருக்கு என்று குற்றம்சாட்டியும் வீடியோ வெளியிட்டார். இதில் பல வீடியோக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் இன்று காலை சங்கர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான், மாலதி உள்ளிட்ட மொத்த டீமையும் போலீசார் கைது செய்ய போகிறார்கள் என அலறி அடித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் காலையில் தனது வீட்டிற்கு ஆதம்பாக்கம் போலீஸ் வந்து காத்துள்ளனர். ஆனால் நான் வழக்கறிஞர்கள் வந்தால் தான் வீட்டின் கதவை திறப்பேன் என தெரிவித்துவிட்டேன்.

இதனால் போலீசார் வாசலில் காத்துள்ளனர் என தெரிவித்துள்ளார். இதே போல சங்கரோடு வசிக்கும் மாலதியும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் போலீசார் வீட்டிற்கு வெளியே நிற்கிறார்கள். எந்த நேரமும் கைது செய்யப்படலாம். இந்த வழக்கில் எப்ஐஆரில் சங்கர், தனது பெயர் மற்றும் மேலும் 4 பேர் பெயர்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். எதற்கு சங்கர் கைது செய்யப்படுகிறார் என்றால் ரெட் அண்ட் ஃபாலோ என்ற திரைப்படம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக கூறி, அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் புருஷோத்தமன், கடந்த ஜூன் மாதம் சங்கர் அலுவலகத்திற்கு சென்று விசாரித்துள்ளார்.

அப்போது அந்த வீடியோவை நீக்க ரூ. 10 லட்சம் பணம் கேட்டதாகவும், இதனால் அப்போது ஏற்பட்ட மோதலில் தயாரிப்பாளர் புருஷோத்தமனை அடித்து அவர் கையில் வைத்திருந்த ரூ. 2 லட்சம் பறித்து விட்டதாகவும் எப்ஐஆரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் சம்பந்தமாக போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்துள்ளனர். அவர் காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணிவரை கதவை திறக்காமல், வேண்டும் என்றால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வாருங்கள் என்று மிரட்டும் தொணியில் வீடியோ வெளியிட்டுள்ளார். இதனால் போலீசார் கதவை, தீயணைப்பு துறையினர் மூலம் துண்டித்து உள்ளே சென்று யுடியூபர் சங்கரை கைது செய்தனர்.

 

Related Stories: