தாய், மகள்களை தாக்கி கொலை மிரட்டல்

 

நெட்டப்பாக்கம் செப். 11: நெட்டப்பாக்கம் அருகே தாய், மகள்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நெட்டப்பாக்கம் அருகே சூரமங்கலம்பேட் மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் கலைச்செல்வி (60). இவரது வீட்டு வேலியை சில தினங்களுக்கு முன்பு அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் கூலித் தொழிலாளியான இருசப்பன் (36) பறித்து எறிந்ததாக கூறப்படுகிறது.

இதை கலைச்செல்வி தட்டிக் கேட்ட நிலையில், ஆத்திரமடைந்த இருசப்பன் கலைச்செல்வியை மட்டுமின்றி அவரது மகள்களான லட்சுமி, கலைவாணி உள்ளிட்ட 3 பேரையும் ஆபாசமாக திட்டியதோடு அருகில் இருந்த செங்கல்லை எடுத்து தாக்கினாராம். பின்னர் கலைச்செல்வி வீட்டில் இருந்த குடிநீர் பைப் உள்ளிட்டவற்றை சேதப்படுத்திவிட்டு, கொலை மிரட்டல் விடுத்த இருசப்பன் அங்கிருந்து தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.

இதில் காயமடைந்த கலைச்செல்வி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் சம்பவம் குறித்து நேற்று மடுகரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் எஸ்ஐ குப்புசாமி தலைமையிலான போலீசார், இருசப்பன் மீது ஆபாசமாக திட்டுதல், பெண்களை தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தாய், மகள்களை தாக்கி கொலை மிரட்டல் appeared first on Dinakaran.

Related Stories: