டிரான்ஸ்பார்மரில் பழுது நீக்கும்போது மின்சாரம் பாய்ந்து வயர்மேன் பலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே டிரான்ஸ்பார்மரில் பழுது பார்த்தபோது மின்சாரம் பாய்ந்து வயர்மேன் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி (58). காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் உள்ள மின்சார வாரியத்தில் வயர்மேனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று துலங்கும் தண்டலம் கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் பழுதாகி மின்சாரம் இல்லை என மின்வாரிய அலுவலகத்துக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதனால் டிரான்ஸ்பார்மரில் உள்ள பழுதை நீக்குவதற்காக வயர்மேன் பக்கிரிசாமி அனுப்பி வைக்கப்பட்டார். அதன்படி சம்பவ இடத்துக்கு சென்ற பக்கிரிசாமி, மின் இணைப்பை துண்டித்துவிட்டு டிரான்ஸ் பார்மரில் ஏறி பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து டிரான்ஸ்பார்மரிலேயே பக்கிரிசாமி துடித்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனே 108 ஆம்புலன்ஸ் மற்றும் காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அதற்குள் உடல் கருகி பக்கிரிசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் பாலுசெட்டிசத்திரம் போலீசார் வந்து, மின்சாரம் பாய்ந்து இறந்த பக்கிரிசாமியின் உடலை டிரான்ஸ்பார்மரில் இருந்து இறங்கி பிரேதபரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, டிரான்ஸ்பார்மரில் சரிவர மின்இணைப்பை துண்டிக்காததால் விபத்து நடந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டிரான்ஸ்பார்மரில் பழுது நீக்கும்போது மின்சாரம் பாய்ந்து வயர்மேன் பலியான சம்பவம் காஞ்சிபுரம் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

The post டிரான்ஸ்பார்மரில் பழுது நீக்கும்போது மின்சாரம் பாய்ந்து வயர்மேன் பலி appeared first on Dinakaran.

Related Stories: