காருடன் 900 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கிருஷ்ணகிரி, மே 13: பர்கூரில் இருந்து ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 900 கிலோ ரேஷன் அரிசியை கைப்பற்றிய போலீசார், 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் எஸ்.ஐ.க்கள் மூர்த்தி, நேரு, கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு பர்கூர் போஸ்ட் ஆபிஸ் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 50 கிலோ எடை கொண்ட 18 பைகளில் 900 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அரிசியை காருடன் பறிமுதல் செய்த போலீசார், அந்த காரை ஓட்டி வந்த சின்னபர்கூர் சதீஷ்(30), அதே பகுதியை சேர்ந்த சுரேந்திரன்(32) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் இருவரும், சின்னபர்கூர், எமக்கல்நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, ஆந்திர மாநிலம் குப்பத்தில் உள்ள ஓட்டல்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காருடன் 900 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: