காதலியை சந்திக்க வந்த வாலிபர் லாட்ஜில் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை சென்னையில் இருந்து வேலூருக்கு

 

வேலூர், பிப்.5: சென்னையில் இருந்து வேலூருக்கு காதலியை சந்திக்க வந்த வாலிபர் லாட்ஜில் தூக்கிட்ட தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் அழகியமங்களகிரியை சேர்ந்தவர் ராஜ்குமார்(29). இவர் சென்னையில் தங்கி அங்குள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவரும் சென்னை தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரியும் வேலூரை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்துள்ளனர். இந்நிலையில் ராஜ்குமார் காதலியை சந்திக்க கடந்த 1ம் தேதி சென்னையில் இருந்து வேலூருக்கு வந்துள்ளார். தொடர்ந்து புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அவர் அறையில் இருந்து வெளியே வராததால் லாட்ஜ் ஊழியர்கள் சந்தேகமடைந்தனர். நேற்று முன்தினம் இரவு அவர் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசாருக்கு ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறியில் தூக்கிட்டு ராஜ்குமார் தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது. இதையடுத்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜ்குமாருக்கும் அவரது காதலிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதனால் மனமுடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காதலியை சந்திக்க வந்த வாலிபர் லாட்ஜில் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை சென்னையில் இருந்து வேலூருக்கு appeared first on Dinakaran.

Related Stories: