இன்ஸ்ெபக்டர் விழுப்புரம் சரகத்திற்கு பணியிட மாற்றம் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் ஐஜி அதிரடி வேப்பங்குப்பத்தில் பணியாற்றி ஆயுதப்படைக்கு சென்ற

வேலூர், செப்.12: புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சுரேஷ்பாபு விழுப்புரம் சரகத்திற்கு பணியிட மாற்றம் செய்து ஐஜி உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த பாக்கம்பாளையம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண் கடந்த மாதம் 19ம் தேதி வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ‘என்னை வாலிபர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்தார். ஆனால், அவர் இன்ஸ்டாகிராமில் தஞ்சாவூரை சேர்ந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனை தட்டி கேட்டபோது, என்னுடன் அவர் தனிமையில் இருந்த வீடியோ மற்றும் போட்டோ உள்ளது. அதனை, பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு அசிங்கப்படுத்திவிடுவேன் என்று மிரட்டுகிறார்’ என தெரிவித்துள்ளார்.

ஆனால், புகார் கொடுத்து 10 நாட்களுக்கும் மேலாகியும் எந்த ஒரு நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லையாம். இதனால், மனவேதனையடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அவரை குடும்பத்தினர் மீட்டனர். இதுதொடர்பாக சமூகநலத்துறையில் பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் அளித்தார். இதேபோல் எல்லப்பன்பட்டி கிராமத்தில் முனீஸ்வரன் கோயில் திருவிழா தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே மோதல் விவகாரத்திலும் வேப்பங்குப்பம் போலீசார் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லையாம். பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் மேற்கொள்வதாக புகார் எழுந்தது.

இதற்கிடையில் தொடர் புகார்களுக்கு ஆளான வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் கோபிநாத் ஆகிய 3 பேரையும் வேலூர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி மதிவாணன் கடந்த 1ம் தேதி உத்தரவிட்டார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் கோபிநாத் இருவரும் மீண்டும் காவல் நிலைய பணிக்கு திரும்பினர். இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை வேலூர் சரகத்தில் இருந்து விழுப்புரம் சரகத்திற்கு பணியிட மாறுதல் செய்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post இன்ஸ்ெபக்டர் விழுப்புரம் சரகத்திற்கு பணியிட மாற்றம் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் ஐஜி அதிரடி வேப்பங்குப்பத்தில் பணியாற்றி ஆயுதப்படைக்கு சென்ற appeared first on Dinakaran.

Related Stories: