திருவாரூர்: திருவாரூர் கலெக்டர் அலுவகத்தில் நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கலந்து கொண்டார். அப்போது, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் பதிவாளர்கள் நியமனத்துக்கு ஒவ்வொரு பதிவாளரிடம் உயர்கல்வித்துறை அமைச்சர் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர், எந்தவித பதிலும் அளிக்காமல் காரில் ஏறி சென்றார்.
பின்னர், திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தற்போது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் அன்னை தெரசா பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களில் மட்டுமே துணைவேந்தர்கள் பணியில் உள்ளனர்.
மீதமுள்ள 11 பல்கலைக்கழகங்களும் துணைவேந்தர்கள் இல்லாமலேயே இயங்கி வருகின்றன. இதுகுறித்து சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்டிலும் வழக்குகள் நிலுவையிலுள்ளது குறித்து, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநில உரிமைகளை எக்காலத்திலும், முதலமைச்சரோ, ராகுல் காந்தியோ விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
