சேலம்: தமிழகத்தில் வரும் 17ம் தேதி முதல், முழுமையான ஆன்லைன் பத்திரப்பதிவு முறை தொடங்க உள்ளதாக அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். சேலத்தில் தனியார் பள்ளி விளையாட்டு விழாவில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் ஆன்லைன் முறையில் முழுமையாக பத்திரப்பதிவு செய்யும் நடைமுறை, வரும் 17ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. முதல்வர் ஜோசப் விஜய், ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவு செய்யும் நடைமுறையை தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடு பணிகளில், துறை சார்ந்த அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஆன்லைன் முறையில் முழுமையாக பத்திரங்களை பதிவு செய்வதற்கான பயிற்சிகளும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சில இடங்களில், சர்வர் பிரச்னை அவ்வப்போது ஏற்படுவதை கருத்தில் கொண்டு, சர்வர்களின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டுள்ளோம். பொதுமக்கள் வீடுகளில் இருந்தபடி, ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவு செய்யும் நடைமுறை பெரிய அளவில் அவர்களுக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
* தடுமாறி விழுந்த அமைச்சர்
தனியார் பள்ளி விளையாட்டு விழாவில், பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், முன்னாள் மாணவர்களுக்கும், தற்போது பயின்று வரும் மாணவர்களின் பெற்றோருக்கும் இடையே, கயிறு இழுக்கும் போட்டி நடத்தது. இதில் முன்னாள் மாணவர்கள் அணியில், அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டார். அவரது அணியினர் வேகமாக கயிற்றை இழுக்க, கயிறு திடீரென அறுந்தது. இதனால் அமைச்சர் உள்ளிட்டோர் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
