குல்காம் : குல்காம் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதலில் காயங்களால் மேலும் ஒரு புலம்பெயர் தொழிலாளி உயிரிழந்ததை அடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் சத்தீஸ்கரைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றி வரும் வெளிமாநில தொழிலாளர்களை குறிவைத்து அடிக்கடி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் சம்பவம் தொடர்கதை ஆகி வருகிறது.
இந்தத் தாக்குதலில் இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்ததாகவும், அவர்களில் ஒருவரான தீபக் ரத்ரே, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்பே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த மற்றொரு நபரான போபிந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இன்று காலை சிகிச்சை பலனின்றி இரண்டாவது புலம்பெயர் தொழிலாளி உயிரிழந்ததை அடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. பயங்கரவாதிகள் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கிறார்களா என்று தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது.
