திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே வீட்டில் பதுக்கிவைத்திருந்த ஆந்திர மாநில மதுபாட்டில்களை பறிமுதல் செய்து முதியவரை கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி சாய்பிரனீத் உத்தரவின்படி, திருவள்ளூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் திருப்பாச்சூர், கைவண்டூர், பட்டரைபெரும்புதூர் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது பட்டரைபெரும்புதூரில் ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டபோது ஆந்திர மாநில மதுபானங்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கிருந்த கோபால்(75) என்பவரை கைது செய்தனர். இவர், ஆந்திராவில் இருந்து குறைந்த விலைக்கு மதுபானங்களை வாங்கி வந்து பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கோபாலிடம் இருந்து 20 குவார்ட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதன்பின்னர் அவரை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
