கார்கில் வெற்றி தினம் போர் நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை: ஜனாதிபதி, பிரதமர் மோடி அஞ்சலி

புதுடெல்லி: லடாக்கின் கார்கில் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவியதைத் தொடர்ந்து, ‘ஆபரேஷன் விஜய்’ நடவடிக்கை மூலம் இந்திய ராணுவம் போரிட்டு, கடந்த 1999ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி வெற்றி பெற்றது. இந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் கார்கில் வெற்றி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 27வது கார்கில் வெற்றி தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, லடாக்கின் டிராஸில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் உயிர் நீத்த வீரர்களுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன், லடாக் துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, ராணுவ தளபதி ஜெனரல் தீரஜ் சேத் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளும் மரியாதை செலுத்தினர். அப்போது ராஜ்நாத் சிங் பேசுகையில், ‘‘பயங்கரவாதத்தை தனது அரசின் கொள்கையின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் கடைப்பிடித்து வருவது கண்டிக்கத்தக்கது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்’ விவகாரத்தைத் தவிர, வேறு எந்தப் பேச்சுவார்த்தையும் பாகிஸ்தானுடன் நடத்தப்பட மாட்டாது என்றார். கார்கில் வீரர்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். ஜனாதிபதி முர்மு தனது எக்ஸ் பதிவில், ‘‘தாய்நாட்டை பாதுகாக்க உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு இந்த தேசம் என்றென்றும் கடன்பட்டிருக்கும்’’ என்றார். பிரதமர் மோடி தன் எக்ஸ் பதிவில், ‘‘ இந்திய வீரர்களின் துணிச்சல் என்றென்றும் தேசத்தின் பெருமையாக நிலைத்திருக்கும்’’ என்றார்.

Related Stories: