ஆற்காடு: இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியைச் சேர்ந்தவர் 34 வயது இளம்பெண். கடந்த 23ம்தேதி ஆற்காடு டவுன் போலீசில் புகார் அளித்தார். அதில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தவெகவில் தன்னை இணைத்துக்கொள்வதற்காக அந்த கட்சியின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் விஜய்மோகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது அவர் கட்சியில் பதவி என்பது அவ்வளவு சுலபமாக கொடுத்து விட முடியாது. நான் உனக்காக செய்கிறேன் என்று என்னிடம் பேச ஆரம்பித்தார்.
அதன்பிறகு எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். மேலும் இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்டு ஆடையின்றி வீடியோ அனுப்பும்படி வற்புறுத்தினார். அதோடு என்னை ஆபாச வீடியோக்கள் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி வருகிறார். இதுதொடர்பாக ராணிப்பேட்டை எம்எல்ஏ தாஹிராவிடம் கூறினேன். அவர் ‘வீடியோக்களை டெலிட் செய்துவிடும்படி கூறினார். அதற்கு சரி என கூறிய மாவட்ட செயலாளர் வீடியோ எதையும் டெலிட் செய்யவில்லை. மேலும் நான் ஆளுங்கட்சி மாவட்ட செயலாளர். என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி என்னை ஆபாசமாக திட்டி மிரட்டினார்.
மேலும் தனியார் தொலைக்காட்சி நிருபர் ஜான்பிரிட்டோ என்பவர் போன் செய்து, ‘ஏன் இதுபோல செய்கிறாய்? உன்னை சும்மா விட்ருவோமா? நீ செத்தாயடி’ என மிரட்டினார். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து தவெக மாவட்ட செயலாளர் விஜய்மோகன் மற்றும் ஜான் பிரிட்டோ ஆகியோர் மீது பிஎன்எஸ் பிரிவுகள் 75 (பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தல்), 76 (பெண்ணை நிர்வாணமாக இருக்க கட்டாயப்படுத்துவது), 77 (பெண்ணின் அந்தரங்கத்தை படம் பிடித்தல்), 351(2) (கிரிமினல் மிரட்டல்) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் ஆற்காடு டவுன் எஸ்ஐ பாபு நேற்று வழக்கு பதிவு செய்தார். இதுதொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
