ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்

 

புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவு பிரச்னையில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோல் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீட் நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக, நேற்று நாடாளுமன்றத்தின் நுழைவு வாயிலில் ஆளும் பாஜக கூட்டணி மற்றும் ‘இந்தியா’ கூட்டணி எம்பிக்களுக்கு இடையே நேரடியாக கடும் மோதல் சூழல் வெடித்தது. இரு தரப்பினரும் ஒரே நேரத்தில் அங்கு கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களின் எதிர்காலத்தை சீரழித்த இந்த முறைகேடு குறித்து விவாதம் நடத்த விடாமல் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு முடக்குவதாக ஆளும் தரப்பு குற்றம் சாட்டியது.

ஆனால், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் முறைகேடு நடந்ததை மறைக்காமல், இதற்கு காரணமான ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், இன்று 4ம் நாளாக நாடாளுமன்றத்தின் மகர் த்வார் பகுதியில் கைகளில் பதாகைகள் மற்றும் பேனர்களை ஏந்தியபடி எதிர்க்கட்சி எம்பிக்கள் தங்களது போராட்டத்தை தீவிரமாக தொடர்ந்தனர்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும், மாணவர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இளைஞர்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், ‘நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் போது பிரதமர் மோடி அவைக்குள் பேசாமல், நள்ளிரவில் வீடியோ பதிவு செய்து வெளியே ஒருதலைப்பட்சமாக பேசுவதை நிறுத்த வேண்டும். நாடாளுமன்றத்திற்கு வரும் முன் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பணிநீக்கம் செய்துவிட்டு வர வேண்டும். மாணவர்கள் மீது லத்தி, தடி மற்றும் பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்த உத்தரவிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்துவிட்டு, இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்ட பின்னரே கல்வி முறை பற்றிய விரிவான விவாதம் நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்’ என்று கூறினார். இதற்கிிடையே தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மேற்கொண்டு வந்த 26 நாள் உண்ணாவிரதப் போராட்டம், ஒன்றிய அரசின் சில உறுதிகளுக்குப் பிறகு இன்று முடிவுக்கு வந்தது.

நாட்டின் பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் தொடர்ச்சியாக, நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில், சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதை அடுத்து, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவன தலைவர் அபிஜீத் திப்கே செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘சோனம் வாங்சுக் தனது 26 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டது மிகுந்த நிம்மதி அளிக்கிறது. அவரின் உயிர் இந்த நாட்டிற்கு மிகவும் விலையானது. இருப்பினும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை எங்கள் போராட்டம் ஓயாது.

ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமானால், அது நடுநிலையான இடத்தில் மட்டுமே நடக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். தொடர்ந்து, அக்கட்சியின் பிரதிநிதி அசுதோஷ் ரங்கா கூறுகையில், ‘எங்களுடன் ஒன்றிய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் இன்று மதியம் பேச்சு நடத்த உள்ளனர். அதற்கு முன் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படும். பொதுமக்கள் அளித்த கடும் அழுத்தம் காரணமாகவே பிரதமர் நள்ளிரவு 12 மணிக்கு செல்பி வீடியோ வெளியிட நேரிட்டது. கடுமையான நடவடிக்கை என்பது கல்வி அமைச்சரை பதவியில் இருந்து நீக்குவது மட்டுமே’ என்று அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் தீபக் பால்யான் கூறுகையில், ‘ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்யும் வரை இந்த காலவரையற்ற போராட்டம் தொடரும். வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறுவது வெறும் வார்த்தைகள் மட்டுமே. ஏற்கனவே பலமுறை ஏமாற்றப்பட்ட இளைஞர்கள் இப்போது விழித்துக் கொண்டுள்ளனர். எனவே, ஒன்றிய அரசின் வாக்குறுதிகளை அவர்கள் இனி நம்ப மாட்டார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: