டெல்லி: தலைநகர் டெல்லியில் மாணவர்களின் போராட்டம் தொடரும் நிலையில், ஒன்றிய அரசுடன் நடைபெற்ற இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) செய்தித் தொடர்பாளர்களான அசுதோஷ் ரன்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோர், ஒன்றிய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோரை சந்தித்து பேசியதாக கூறினர்.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் தங்களது இரண்டு கோரிக்கைகளை ஏற்று கொள்வதற்கு ஒன்றிய அரசு கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பதிலளிக்க நாளை வரை அவகாசம் கோரியுள்ளதாகவும் தகவல் தெரிவித்தனர்.
அமைச்சர் தர்மேந்திர பிரதானை நீக்குவது குறித்து ஒன்றிய அரசு உடனடி முடிவு எதையும் அறிவிக்கவில்லை. இதுகுறித்து மேலும் ஆலோசிக்க நாளை மதியம் வரை அவகாசம் கோரியுள்ளது. அமைச்சர் விரைவில் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என தாங்கள் நம்புவதாக கூறினர்.
நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் மற்றும் மாணவர்கள் மீதான முதல் தகவல் அறிக்கைகள் (FIR) மற்றும் சட்டரீதியான வழக்குகளைத் திரும்பப் பெறவும் என தங்களின் இரண்டு முக்கிய கோரிக்கைகளுக்கும் அரசு கொள்கை அளவில் ஒப்புதல் தெரிவித்துள்ளது என்று குறிப்பிட்டு உள்ளனர். பிரதான் பதவி விலக வேண்டும் என்பதால் தாங்கள் உறுதியாக உள்ளதாகவும், இந்த கோரிக்கை நிறைவேறாமல் தங்களின் போரட்டம் முடியாது என்றும் உறுதிபட கூறினர்.
