சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் கடந்த 17ம்தேதி நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ.94,000 கணக்கில் வராத பணம் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் (ஜிபே) சுமார் ரூ.12 லட்சம் லஞ்சம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியராஜ் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் ஆய்வுக்குழு அலுவலர் சிவசங்கரன் ஆகியோர் அங்குள்ள பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் திடீரென புகுந்து ரெய்டு நடத்தினர்.
அங்கிருந்த செயல் அலுவலர் கணேசன், தலைமை எழுத்தர் வைத்தியலிங்கம் உள்ளிட்ட இளநிலை உதவியாளர்களிடம் சோதனை நடத்தினர். பணம் ஏதாவது பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என அவர்களின் வாகனங்களையும் பரிசோதித்தனர். 6 மணி நேரமாக நடந்த அதிரடி ரெய்டில் வீட்டுமனை அப்ரூவல் உள்ளிட்டவை வழங்க சுமார் ரூ.8 லட்சம் வரை ஜிபே மூலமாக லஞ்சம் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணிகளில் விஜிலென்ஸ் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
