சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முடியரசன் சாலை பகுதியில் உள்ள இலுப்பக்குடி சுயம்பிரகாசேசுவரர் கோவில் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்து விற்க முயற்சி என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலுப்பக்குடி சுயம்பிரகாசேசுவரர் கோவில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள நகரத்தார் 9 கோவில்களில் ஒன்றாகும். பரம்பரை அறங்காவலர்களால் சுழற்சி முறையில் நிர்வகிக்கப்படும் இக்கோவிலுக்கு சொந்தமாக காரைக்குடி நகரில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் உள்ளது.
இந்நிலையில் இன்று முடியரசன் சாலை பகுதியில் உள்ள கோவில் நிலத்தை ஜேசிபி வாகனங்கள் மூலம் சுத்தப்படுத்தியபோது மோசடி அம்பலமானது. கோயில் நிலம் மோசடியாக விற்பனை செய்யப்படுவதை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். கோயில் நிலத்தை அதிகாரிகள் துணையுடன் போலி ஆவணங்களை கொண்டு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த கோவில் நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.50 கோடி ஆகும். இந்த நிலத்துக்கு காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் பட்டா மாறுததலுக்கு தயாராக உள்ள நிலையில் கிராம மக்கள் தாலுகா அலுவலகம் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இரு தரப்பையும் அழைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இளையராஜா பேச்சு நடத்தினார். கோவில் இடம் என புகார் வந்துள்ளதால் நீதிமன்ற உத்தரவு பெற்று வந்து இடத்தை சுத்தம் செய்யுமாறு நிலம் வாங்கியவர்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து நிலம் வாங்கியவர்களும், ஊர் மக்களும் காவல் நிலையத்தில் மாறி மாறி வாக்குவாதம் செய்தனர்.
