உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே நீரடி கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த காவல் தெய்வங்களான சப்த கன்னியம்மன் ஆலயத்தில் 7ம் ஆண்டு ஆடிமாத தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி சப்த கன்னி தெய்வங்களான பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி மற்றும் சாமுண்டி உள்ளிட்ட 7 கன்னி தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தினர். இதன்பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதைத்தொடர்ந்து கோயில் வளாகத்தில் பக்தர்கள் ஊரணி பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர். கோயில் வளாகத்தில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.
இதன்பின்னர் கன்னியம்மன்களின் வீதியுலா முடிந்தபின் விரதம் இருந்து காப்புக் கட்டிய பக்தர்கள் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள், பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
