திருத்தணி முருகன் கோயில் படியில் இருபுறமும் கடைகள் ஆக்கிரமிப்பு: பக்தர்கள் பாதிப்பு

திருத்தணி: திருத்தணி முருகன் கோயில் படிகளின் இருபுறமும் வியாபாரிகள் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளதால் இடநெருக்கடி ஏற்பட்டு பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆடி மாதம் தொடங்கியுள்ள நிலையில், திருத்தணி முருகன் கோயிலுக்கு காவடிகள் சுமந்து வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான பக்தர்கள் சரவண பொய்கை திருக்குளத்தில் காவடிகளுக்கு பூஜை செய்து படிகள் வழியாக மலைக் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சரவண பொய்கை திருக்குளம் வீதி மற்றும் கோயில் படிகளின் இருபுறமும் வியாபாரிகள் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். இதனால் கோயிலுக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆடி மாதத்தில் பக்தர்கள் அதிக அளவில் படிகள் வழியாக கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். எனவே, பக்தர்களின் நலனை கருத்தில்கொண்டு சரவண பொய்கை திருக்குளம் மற்றும் படிகளை ஆக்கிரமித்து வைத்துள்ள கடைகளை அகற்ற கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: