சென்னை: பறிமுதல் செய்யப்பட்ட, கேட்பாரற்ற வாகனங்களின் உரிமையாளர்கள் 15 நாட்களுக்குள் உரிமை கோராவிட்டால் ஏலம் விடப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை பெருநகர காவல், மயிலாப்பூர், கொளத்தூர், புளியந்தோப்பு, வண்ணாரப்போட்டை மற்றும் கோயம்பேடு காவல் நிலையப் பகுதிகளில் சாலையோரங்களில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மொத்தம் 1863 எண்ணிக்கையிலான பல்வேறு வகையான வாகனங்களை அப்புறப்படுத்தி, அந்தந்த காவல் நிலைய வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்களின் விவரங்கள் சென்னை மாநகராட்சி இணையதளமான www.chennaicorporation.gov.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வாகனங்களை உரிமை கோருவோர் சம்பந்தப்பட்ட காவல் நிலையமான சென்னை மயிலாப்பூர், கொளத்தூர், புளியந்தோப்பு, வண்ணாரப்போட்டை மற்றும் கோயம்பேடு காவல் நிலையங்களை செய்தி வெளியான 15 நாட்களுக்குள் அணுக வேண்டும். அவ்வாறு உரிமை கோரப்படாத வாகனங்களை மின்னணு ஏலம் மூலம் கழிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
