சென்னை: வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளுக்கு, தனியார் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தக் கூடாது என்று தமிழக வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கும், கோயில் யானைகளுக்கும் சிகிச்சை அளிக்க தனியார் தொண்டு நிறுவனத்துக்கு தலைமை வனப்பாதுகாவலர் அனுமதி வழங்கியுள்ளதாகவும், இந்த அனுமதியை திரும்பப் பெற உத்தரவிடக் கோரி விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில், வனத்துறையில் தகுதியான கால்நடை மருத்துவர்கள், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ள நிலையில், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு சிகிச்சை அளிக்க தனியார் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்க வேண்டிய அவசியம் என்ன என்பதை வனத்துறை வெளிப்படுத்தவில்லை. எனவே, யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் உள்கட்டமைப்பு வசதிகளை மேலும் வலுப்படுத்துமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு சிகிச்சை அளிக்க தனியார் தொண்டு நிறுவனங்களை பணியமர்த்தக் கூடாது என்று வனத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த மனுவுக்கு ஜூலை 31ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு வனத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.
