படுக்கை வசதி வந்தே பாரத் ரயில் உற்பத்தி மேலும் தாமதம்: ஜெர்மனி நிறுவனத்தின் ஒப்புதல் கிடைக்காததால் பின்னடைவு

சென்னை: படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் உற்பத்தி மேலும் தாமதமாகியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள ரயில் பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படுக்கை வசதி கொண்ட அதிநவீன வந்தே பாரத் ரயில்களின் உற்பத்திப் பணிகள் மேலும் காலதாமதமாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயில்களுக்கான வடிவமைப்பு ஒப்புதலை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சர்வதேச சிக்கல்களே இந்த தாமதத்திற்கு முதன்மை காரணமாகக் கூறப்படுகிறது.

இந்திய ரயில்வே துறை, தொலைதூர பயணங்களை மிகவும் எளிதாகவும், வேகமாகவும், சொகுசானதாகவும் மாற்றும் நோக்கில் அதிநவீன படுக்கை வசதி கொண்ட 200 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 120 ரயில்களை உற்பத்தி செய்வதற்காக, ரஷ்யாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து ‘கிட் ரயில்வே சொல்யூஷன்ஸ்’ (Kinet Railway Solutions) என்ற கூட்டு நிறுவனம் தொடங்கப்பட்டது. இதற்கான பிரமாண்ட ஒப்பந்தமும் அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு, ஆரம்பகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. நிச்சயிக்கப்பட்ட உற்பத்தி மையங்களில் இதற்கான படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளை தயாரிப்பதற்கான முதற்கட்டப் பணிகள் தடையின்றி தொடங்கவிருந்த நிலையில், தற்போது இந்த திட்டத்திற்கு எதிர்பாராத சர்வதேசப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

வந்தே பாரத் ரயில்களுக்கான வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கும் பொறுப்பை ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்வதேச ஆலோசனை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ரயில்பெட்டி வடிவமைப்புக்கான இறுதி ஒப்புதலை வழங்குவதில் அந்த ஜெர்மனி நிறுவனம் தொடர்ந்து தாமதம் செய்து வருகிறது. தொழில்நுட்பக் காரணங்களால் இந்த இறுதி வடிவமைப்பு ஒப்புதல் இதுவரை கிடைக்கப் பெறாததால், இந்திய ரயில்வேயும், ரஷ்ய கூட்டு நிறுவனமும் திட்டமிட்டபடி தங்களின் உற்பத்திப் பணிகளை தொடங்க முடியாத ஒரு முட்டுக்கட்டை சூழல் உருவாகியுள்ளது.

தனியார் மற்றும் சர்வதேச கூட்டு நிறுவனங்களின் பங்களிப்போடு மிகக் கடுமையான காலக்கெடுவுக்குள் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், சர்வதேச ஆலோசனை நிறுவனத்தின் இந்த தாமதம் காரணமாக, படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் தண்டவாளத்தில் இறங்கி வணிகரீதியான சேவையைத் தொடங்குவது மேலும் சில மாதங்களுக்கு தள்ளிப் போகும் என்று ரயில்வே உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் சொகுசுப் பயணத்தை எதிர்பார்க்கும் பொதுமக்களின் காத்திருப்பும் நீண்டுள்ளது.

Related Stories: