சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, தன்னுடைய 2 குழந்தைகளைக் கொன்று, தந்தையும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆண்டிக்கரையைச் சேர்ந்தவர் வல்லரசு கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி ஸ்ரீபிரியா கரும்புச்சாறு விற்பனை கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு மைவிழி (4), தர்ஷன் (2) என்ற குழந்தைகள் இருந்தனர். நேற்று முன்தினம் ஸ்ரீபிரியாவுக்கும் அவரது மாமியாருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதால் ஸ்ரீபிரியா மேட்டூர் ராஜகணபதி நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
மனைவியை சமாதானம் செய்து அழைத்துச் செல்ல நேற்று வல்லரசு தனது மாமியார் வீட்டிற்கு வந்தார். நேற்று இரவு வல்லரசு தனது இரு குழந்தைகளுடன் தனி அறையில் தூங்க சென்றார். இதையடுத்து இன்று காலை நீண்ட நேரமாகியும் வல்லரசு கதவு திறக்கப்படாத நிலையில், மனைவி ஸ்ரீபிரியா மற்றும் ஸ்ரீபிரியாவின் தாயார் வெண்ணிலா ஆகியோர் கதவை பலமாக தட்டிப் பார்த்தனர். அப்போதும் கதவு திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்துப் பார்த்தனர்.
அப்போது 2 குழந்தைகளும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தனர். கட்டடத் தொழிலாளி வல்லரசு தனது மனைவியின் சேலையில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். வல்லரசு தனது குழந்தைகளைக் கொலை செய்து, பின்னர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மூன்று சடலங்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
