லார்ட்ஸ் : புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 270 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது . முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 285 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்திய அணி சார்பில் ஸ்மிருதி மந்தனா 83 ரன்களையும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 58 ரன்களையும், தீப்தி சர்மா 57 ரன்களையும் எடுத்தனர். இங்கிலாந்து அணி சார்பில் சோஃபி எக்லஸ்டோன் 3 விக்கெட்களையும், லாரன் ஃபைலர், இஸ்ஸி வோங், மேடி வில்லியர்ஸ் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார். தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து முதல் இன்னிங்ஸில் 170 ரன்களில் ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணியின் ஏமி ஜோன்ஸ் 52 ரன்களை எடுத்தார். இந்திய அணியின் கிராந்தி கௌட் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
115 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 7 விக்கெட்களை இழந்து 341 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது, இந்திய சார்பில் சிறப்பாக ஆடிய யாஸ்திகா பாட்டியா சதமடித்து 113 ரன்களில் ஆட்டமிழந்தார், மேலும் ஸ்மிருதி மந்தனா70 ரன்களையும், ரிச்சா கோஷ் 50 ரன்களையும் எடுத்தனர்.
456 ரன்கள் என்ற கடினமாக இலக்கை கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 186 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஸ்னேஹ் ராணா 4 விக்கெட்களையும், சாயலி சட்கரே, கிராந்தி கௌட், தீப்தி சர்மா தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்தனர்.
இந்த டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய கிராந்தி கௌட் (5/37 & 2/54) ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார். புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி.
