வைகை தென்கரை ரோட்டில் இறைச்சிக் கழிவுகளால் சுகாதாரச் சீர்கேடு

 

மதுரை, ஜூலை 3: மதுரை வைகையாற்றின் தென்கரை ரோட்டில் கோழி இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. மதுரை மாநகராட்சி 49வது வார்டில் வைகையாற்றின் தென்கரை பகுதியில் ஏராளமான இறைச்சிக் கடைகள் உள்ளன. இப்பகுதியை சேர்ந்தவர்கள் கழிவுகளை கொட்டுவதற்காக இங்குள்ள நூர் பள்ளிவாசல் அருகே ஆற்றை ஒட்டி 3க்கும் அதிக குப்பைத்தொட்டிகள் மாநகராட்சி தரப்பில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்பகுதியினர் கோழிக்கழிவுகள் உள்ளிட்டவற்றை கொண்டு வந்து, தொட்டிக்குள் போடாமல், அருகில் தரையில் கொட்டிச் செல்கினறனர்.

இதனால் காகம் போன்ற பறவைகள், தெரு நாய்கள் உள்ளிட்டவை இறைச்சிக்கழிவுகளை இவற்றை இழுத்துச் சென்று சுற்றுப்பகுதிகளில் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் போட்டுச்செல்வது வாடிக்கையாகி வருகிறது. இதனால் அந்த பகுதிகள் முழுவதும், கடும் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. இப்பகுதியினர் கூறும்போது, ‘குறிப்பிட்ட சிலர் இறைச்சிக்கழிவுகளை கண்ட இடத்திலும் கொட்டுகின்றனர். இதனால் நோய் பரப்பும் மையமாக இவ்விடம் மாறியுள்ளது. மாநகராட்சி குப்பைத்தொட்டி வைத்திருந்தும் ரோட்டில் கொட்டிச் செல்வதை பலரும் செய்கின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்க இங்கு கண்காணிப்பு கேமரா அமைத்து, அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்’ என்றனர்.

 

Related Stories: