உத்தரப் பிரதேசம்: ஆக்ரா-லக்னோ விரைவுச்சாலையில் கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 5 பேர் பலி

உன்னாவ்: உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் இன்று, தனியார் ஸ்லீப்பர் பேருந்து கார் மீது மோதி, ஆக்ரா-லக்னோ விரைவுச்சாலையில் கவிழ்ந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து அதிகாலை சுமார் 4.30 மணியளவில், விரைவுச்சாலையின் 230-வது கிலோமீட்டர் புள்ளியில், பங்கர்மாவ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவ்காரி கிராமத்திற்கு அருகே நிகழ்ந்தது.

காவல்துறையினரின் தகவலின்படி, ஹரியானாவிலிருந்து பீகாருக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து, எதிரே வந்த ‘எர்டிகா’ கார் மீது நேருக்கு நேர் மோதியது. மோதலின் தாக்கத்தால் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது; அதைத் தொடர்ந்து, பேருந்து விரைவுச்சாலையின் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு கீழே இருந்த சாலையில் விழுந்தது. இதில் கார் பலத்த சேதமடைந்தது.

காரில் இருந்த துன்முன் (60), அஞ்சு (40), திவ்யா (6), அம்ரிதா (13) மற்றும் ஓட்டுநர் வினோத் (45) என அடையாளம் காணப்பட்ட 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் நான்கு கார் பயணிகளும், நான்கு பேருந்து பயணிகளும் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து காரணம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுநரின் தூக்கக் கலக்கமே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

Related Stories: