திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாநகராட்சி கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது வருகை பதிவேட்டை காங்கிரஸ் கவுன்சிலர்கள் நீண்ட நேரமாக தங்களிடம் வைத்திருந்ததாக கூறி செம்பழந்தி உதயன் என்ற பாஜ கவுன்சிலர் அதை பறிக்க முயன்றார். ஆனால் காங்கிரஸ் கவுன்சிலர்கள் வருகை பதிவேட்டை கொடுக்க மறுத்தனர். இதைத் தொடர்ந்து காங்கிரஸ், பாஜ கவுன்சிலர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 கவுன்சிலர்கள் காயமடைந்தனர். பாஜ கவுன்சிலர் செம்பழந்தி உதயனின் சட்டை கிழிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் திருவனந்தபுரம் மியூசியம் போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. காங்கிரஸ் கவுன்சிலர்கள் அளித்த புகாரின் பேரில் செம்பழந்தி உதயன், கிரிகுமார், ரதீஷ், சஜி ஆகிய 4 பாஜ கவுன்சிலர்கள் மீதும், பாஜ கவுன்சிலர் அளித்த புகாரின் பேரில் காங்கிரசை சேர்ந்த சபரிநாத் மற்றும் மேரி புஷ்பம் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர பொதுவழியை அடைத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக கூறி போலீஸ் தாமாகவே முன்வந்து 2 வழக்குகள் பதிவு செய்துள்ளது. இதில் ஒரு வழக்கில் சிபிஎம் கவுன்சிலர்களான தீபக், ஸ்ரீகுமார் உள்பட 100க்கும் மேற்பட்டோர் மீதும், இரண்டாவது வழக்கில் காங்கிரஸ் கவுன்சிலர்களான சபரிநாத், மேரி புஷ்பம் உள்பட 200 பேர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
