சிவகாசி: சிவகாசி அருகே, டியூசனுக்கு சென்ற பிளஸ் 2 மாணவி கர்ப்பமானது தொடர்பாக, ஆசிரியையின் அண்ணனை போலீசார் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதி கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர், அதே பகுதியில் உள்ள ஆங்கில ஆசிரியையிடம் கடந்த ஓராண்டாக டியூசனுக்கு சென்று வந்துள்ளார். அப்போது ஆசிரியையின் அண்ணன் சதீஷ்குமார் என்பவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் ஒரு நாள், மாணவி வழக்கம் போல டியூசனுக்கு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த சதீஷ்குமார், திருமணம் செய்வதாக கூறி, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனிடையே மாணவியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, சில தினங்களுக்கு முன் பெற்றோர் அவரிடம் விசாரித்துள்ளனர். அவர், 6 மாதத்திற்கு முன் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில், மாணவி தற்போது 6 மாதம் கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து சதீஷ்குமாரை தேடி வருகின்றனர்.
