ஐதராபாத்: நடிகை அமுல்யா ஸ்ரீ தற்கொலை வழக்கில் ஒரு பெண், 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தெலுங்கு திரைத்துறையில் ஹீரோயினாக வேண்டும் என்ற லட்சியத்துடன் ஐதராபாத் வந்த குறும்பட நடிகை அமுல்யா ஸ்ரீ, சில நபர்களின் மிரட்டல் காரணமாக கடந்த 6 மாதங்களாக கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். நடிகை அமுல்யா ஸ்ரீ குளிக்கும் காட்சிகளை ரகசியமாக வீடியோ எடுத்த ஒரு கும்பல், அதை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவோம் என்று கூறி அவரைத் தொடர்ந்து பிளாக்மெயில் செய்து வந்துள்ளது.
தங்களது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று கூறி அந்த கும்பல் கொடுத்த நெருக்கடியால் பாதிக்கப்பட்ட அமுல்யா ஸ்ரீ , இது குறித்து ஏற்கனவே போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் அந்த நேரத்தில் போலீசார் எந்தவிதமான உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் ஏற்பட்ட கடும் மனவேதனையில் அமுல்யா ஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் குறித்து சைதாபாத் போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமுல்யா ஸ்ரீ உயிரிழந்து 10 நாட்களாகியும், இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படாதது அவரது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 4 இளைஞர்கள் மற்றும் ஒரு இளம்பெண்ணுக்கு தொடர்பு இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அமுல்யாவின் தாய் கண்ணீர் மல்க போலீசாரிடம் அளித்த புகாரில், ‘எனது மகளின் மரணத்திற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்து சட்டப்படி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும்’ என்று கூறியுள்ளார். போலீசார் இந்த பிளாக்மெயில் கும்பல் குறித்து பல்வேறு கோணங்களில் ஆதாரங்களை திரட்டி வருகின்றனர்.
