மண்டபம், ஜூன் 6: மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில் பொதுத்தேர்வில் முதல் ஐந்து இடத்தைப் பிடித்த மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. மண்டபம் பேரூராட்சி பகுதியில் மண்டபம் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் வளாகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளியில் ஆண்டுதோறும் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறும் முதல் ஐந்து மாணவ,மாணவிகளுக்கு ஊக்குவிக்கும் விதமாக 1985ம் ஆண்டு முதல் 2000 ஆண்டு வரை பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் பாராட்டு சான்றுகள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ரீனா தலைமை வகித்தார். முன்னாள் மாணவர் அமைப்பு நிர்வாகி தில்லை ராஜன் வரவேற்றார். பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்று முதல் ஐந்து இடத்தைப் பிடித்த மாணவிகளுக்கு நினைவு பரிசாக பாராட்டு சான்றிதழ்களை முன்னாள் மாணவர் அமைப்பு நிர்வாகி சம்பத் ராஜா உள்பட அனைத்து மாணவர்களும் வழங்கினார்கள்.
