திருப்புவனம், ஜூன் 6: திருப்புவனம் மெயின் ரோட்டில் பஸ் நிறுத்தத்தில் உள்ள நிழற்குடையில் நேற்று பகல் மின்வயர் அறுந்து விழுந்தது. இதில் தீப்பற்றி எரிந்ததால் பயணிகள் அதிர்ச்சியில் சிதறி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தீ அருகில் இருந்த கூரை மற்றும் பழக்கடைகளுக்கும் பரவிய நிலையில், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து உடனடியாக தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 2 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. மின்வயர் செல்லும் பகுதியில் வளர்ந்துள்ள மரக்கிளைகள் காற்றில் மின்வயரில் உரசும் போது தீப்பற்றி எரிகிறது. மரக்கிளைகளை வெட்டி அகற்றுவது குறித்து பலமுறை மின்வாரியத்திற்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
