நாகப்பட்டினம் மாவட்ட புதிய கலெக்டராக பிரவீன்குமார் பொறுப்பேற்பு

 

நாகப்பட்டினம், ஜூன் 2: நாகப்பட்டினம் மாவட்ட புதிய கலெக்டராக கே.ஜே.பிரவீன்குமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக பணியாற்றிய ஆகாஷ் மதுரை மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து மதுரை மாவட்டத்தில் கலெக்டராக பணியாற்றிய கே.ஜே.பிரவீன்குமார் நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று மாலை பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய கலெக்டர் கே.ஜே.பிரவீன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: 2017ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்த நான் மதுரை மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராகவும். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சார் ஆட்சியராகவும், ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியராகவும் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), மதுரை மாநகராட்சியில் ஆணையராகவும், பெருநகர சென்னை மாநகராட்சியில் வட்டார துணை ஆணையராகவும், மதுரை மாவட்ட ஆட்சியராகவும் பதவி வகித்துள்ளேன்.

இதன் தொடர்ச்சியாக நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டேன். தமிழக அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களை சென்றடைய செய்வேன். ராமநாதபுரத்தில் பணியாற்றி உள்ளதால் கடலோர மாவட்டத்தில் உள்ள சவால்கள் நன்கு அறிந்தவர் என்ற முறையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீனவர்கள் சார்ந்த பிரச்சனைக்கு எளிதில் தீர்வு காண்பேன். அதே போல் விவசாயம் சார்ந்த மாவட்டமாகவும் நாகப்பட்டினம் இருப்பதால் விவசாயிகள் பிரச்சனைக்கும் முக்கியத்துவம் கொடுப்பேன். நாகப்பட்டினம் மாவட்ட மக்களுக்கு சிறப்பான முறையில் அனைத்து நலத்திட்டங்களை கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுப்பேன். நாகப்பட்டினம் மாவட்டம் மிகவும் அழகான மாவட்டம். இங்கு பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு கலெக்டர் கே.ஜே.பிரவீன்குமார் கூறினார்.

 

Related Stories: