தஞ்சை புதிய கலெக்டர் ரேவதி பேட்டி

தஞ்சாவூர், ஜூன் 2: தஞ்சாவூர் மாவட்ட புதிய கலெக்டராக ரேவதி நேற்று காலை பொறுப்பேற்று கொண்டார். தஞ்சை மாவட்ட கலெக்டராக பிரியங்கா பங்கஜம் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், பேரூராட்சி இயக்குனராக பணி மாறுதலில் சென்றார். இதையடுத்து தஞ்சை மாவட்ட புதிய கலெக்டராக உயர்கல்வித்துறை துணை செயலாளராக இருந்த ரேவதி நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், நேற்று காலை தஞ்சை மாவட்ட புதிய கலெக்டராக ரேவதி கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். புதிய கலெக்டருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், ஆர்டிஓ நித்யா மற்றும் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர், தஞ்சை மாவட்ட புதிய கலெக்டர் ரேவதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தஞ்சை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று கொண்டதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். ஏற்கனவே இருந்த பல மாவட்ட ஆட்சியர்கள் பல்வேறு நல்ல திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளனர். மாவட்டத்தினின் உயர்வுக்கு அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம். மாவட்ட ஆட்சியர் பதவியை கடமையுடனும், பொறுப்புடனும் செயல்படுத்துவோம். அரசு வழங்கும் நலத்திட்டங்களை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு செல்வேன். தஞ்சை மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டம் என்பதால் விவசாயிகளின் தேவையை அறிந்து அதனை நிவர்த்தி செய்ய முயற்சி செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

 

Related Stories: